வடலுார் : கடலுார் மாவட்டம், வடலுார், தர்ம சாலையை சேர்ந்தவர் திருமுருகன், 35, நெய்வேலி தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு கிஷோர், 15, என்ற மகனும், 10 வயதில் மகளும் இருந்தனர்.இவர்களில் கிஷோர், வடலுார் சந்தைதோப்பு எஸ்.டி.சியோன் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். சிலம்பம் போட்டியில், மாநில அளவில் பரிசு பெற்றவர். கடந்த 24ம் தேதி மாலை, அவர் படிக்கும் பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது, சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி, அங்கு நின்றிருந்த கிஷோர் தலையில் குத்தியது. அதில் படுகாயமடைந்த கிஷோர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினர். அதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.இந்நிலையில், கிஷோர் மூளைச்சாவு அடைந்ததால் மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, வீட்டில் பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு, நேற்று மயங்கி விழுந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.போதிய இட வசதியில்லாத மைதானத்தில் பயிற்சி அளித்ததே, இந்த சோக சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.