| ADDED : பிப் 20, 2024 12:23 AM
புதுச்சத்திரம்:வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற விவசாயிடம் 50,000 ரூபாயை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கே.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் திருமூலம், 70; விவசாயி. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது மகன், விவசாய பணிக்காக புதுச்சத்திரம் கனரா வங்கியில் உள்ள தனது தந்தை வங்கி கணக்கில் 50,000 ரூபாய் அனுப்பியிருந்தார்.அந்த பணத்தை நேற்று திருமூலம் புதுச்சத்திரம் கனரா வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு தங்கள் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், 50, என்பவருடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட்டை ரமேஷ் ஓட்டினார். திருமூலம் பணப்பையை கையில் வைத்திருந்தார். மொபட் பரங்கிப்பேட்டை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிரில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கண் இமைக்கும் நேரத்தில், திருமூலம் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பினர்.இதுகுறித்த புகாரின் படி, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.