| ADDED : பிப் 24, 2024 06:19 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாதோப்பு அருகே கன்டெய்னர் லாரி பின்புறத்தில் பைக் மோதியதில் வாலிபர் இறந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், வீராணம் ஏரிக்கரை கூளாப்பாடி காலனியை சேர்ந்த ராஜகோபால் மகன் ராகுல்,27; திருமணமாக வில்லை. இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த ராகுல் மீண்டும் திருப்பூர் செல்ல நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் கூளாப்பாடியிலிருந்து நண்பர்கள், பரணிதரன், புகழ்வேல் ஆகியோருடன் பைக்கில் வந்துள்ளார்.சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் பஸ் கிடைக்காததால் மூவரும் சேத்தியாத்தோப்பு ராஜிவ்காந்தி சிலை பஸ் நிறுத்தத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே கும்பகோணத்திலிருந்து வந்த கன்டெய்னர் லாரியை கடக்க முயன்றபோது லாரியின் பின்புறம் உள்ள பம்பரில் பைக் மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த ராகுல் அதே இடத்தில் இறந்தார்.படுகாயமடைந்த பரணிதரன்,புகழ்வேல் இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.