| ADDED : ஜூலை 06, 2024 08:25 AM
தர்மபுரி: அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பணியாற்றும், கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கல்லுாரி முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2019 முதல் மாதம், 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து, 60 வயது வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும். யு.ஜி.சி., நிர்ணயித்த மாத ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். அரசாணை எண், 56-யை அமல்படுத்திட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக, 4 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.