கடந்த, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும்' என, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உறுதியளித்தார். ஆட்சி பொறுப்பேற்று, 3 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமுமின்றி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஒடசல்பட்டியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, 'தி.மு.க., வெற்றி பெற்றால் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும்' என வாக்குறுதி அளித்தார்.அரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், 'தேர்தல் முடிந்தவுடன் நானே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்' என்றார்.தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரால், கடந்த சில நாட்களாக கே.ஈச்சம்பாடி தடுப்பணை நிரம்பி அதிலிருந்து, தண்ணீர் வீணாக தென்பெண்ணையாற்றில் செல்கிறது. கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், தற்போது, ஆற்றில் செல்லும் தண்ணீர் மூலம் வறண்டு கிடக்கும், 66 ஏரிகளை நிரப்பி இருக்கலாம். இத்திட்டம் குறித்து கலெக்டர், அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தாலும் எந்த பதிலும் வருவதில்லை. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணையாறு ஓடுகிறது. இருப்பினும் மொரப்பூர், கடத்துார், அரூர் பகுதிகள் வறட்சியாகத்தான் உள்ளது.- எஸ்.ஜெயபால்,தலைவர், மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம்.கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தின் திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு ஆண்டு, 10 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களை சந்தித்தபோது, அனைவரும் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என கூறினாலும், கிடப்பில்தான் உள்ளது. கிருஷ்ணகிரி அணையும் நிரம்பி விட்டது. தற்போது தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. மொரப்பூர், கடத்துாரிலுள்ள ஏரிகள் நீரின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன.- ஜி.சுரேஷ், சென்னம்பட்டி.