ஓசூர்: கெலமங்கலம் டவுன் பஞ்., 11வது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகரில், 25 ஆண்டுக்கு முன் அமைத்த ஆழ்துளை கிணற்றில் இருந்து வினியோகம் செய்த குடிநீர், கழிவுநீருடன் கலந்து வருவதால், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீரும் கிடைப்பதில்லை என்றும், 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவுப்படி, காந்தி நகர் பகுதி போர்வெல்லில், டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, அருகிலுள்ள நாயக்கன் ஏரியில் தண்ணீர் குறைந்து விட்டதாலும், அருகே அரச மரத்தின் வேர்கள் போர்வெல்லுக்குள் வருவதாலும், குடிநீர் கறுப்பாக வருவது தெரிந்தது.இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு, டேங்கர் வாகனம் மூலம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நேதாஜி நகர் வரை செல்லும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பைப்லைனில் இருந்து, இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு வழங்கவும், அப்பகுதியிலுள்ள போர்வெல்லில் இருந்து, 4 பொது குடிநீர் குழாய்கள் அமைத்து, குடிநீர் வழங்க, டவுன் பஞ்., தலைவர் சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.