| ADDED : டிச 02, 2025 02:45 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன், காமாட்சியம்மன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 36. இவர் மனைவி பாக்கியலட்சுமி, 30. செந்தில்குமார் பாளையம் சுங்கச்சாவடி அருகே தொம்பரகாம்பட்டியில் நர்சரி வைத்துள்ளார். நேற்று, பாக்கியலட்சுமி நர்சரியில் பணிகளை முடித்து விட்டு, தர்மபுரி திரும்ப தொம்பரகாம்பட்டி பஸ் ஸ்டாபில் நேற்று மாலை, 4:30 மணிக்கு காத்திருந்தார். அவ்வழியாக வந்த, 22ம் எண் அரசு டவுன் பஸ்சை நிறுத்த, பெண்கள் சிலர் கை காட்டினர். ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் வேறு பஸ்சில் பாக்கியலட்சுமி தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கு டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்த, 22 எண் டவுன் பஸ் கண்டக்டரிடம் 'ஏன் பஸ்சை நிறுத்தவில்லை' எனக்கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'எங்களை, மகளிர் இலவச பயணத்தில் இலவசமாக அழைத்து வர விருப்பமில்லை என்றால், டிக்கெட் வாங்கி கொண்டு, எங்களை பயணம் செய்ய அனுமதியுங்கள். இலவசம் என்பதால் புறக்கணிக்கிறீர்களா' எனக்கேட்டார். இதற்கு அங்கிருந்த கண்டக்டர் மற்றும் டிக்கெட் பரிசோதகர், டிரைவர் ஆகியோர், எந்த பதிலையும் கூறாமல் அங்கிருந்து சென்றனர்.டவுன் பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணத்தை அரசு அறிவித்து, பஸ்களை இயக்கி வருகிறது. ஆனால், பல இடங்களில் இலவச பயணம் செய்வதால், பெண்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கிறது.