உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் தொட்டி பராமரிப்பு அலட்சியத்தால் விபத்து, தொற்று.. அபாயம்! செலவினத்திற்காக தட்டிக்கழிக்கும் உள்ளாட்சிகளால் பிரச்னை

குடிநீர் தொட்டி பராமரிப்பு அலட்சியத்தால் விபத்து, தொற்று.. அபாயம்! செலவினத்திற்காக தட்டிக்கழிக்கும் உள்ளாட்சிகளால் பிரச்னை

கன்னிவாடி : குடிநீர் வினியாக தொட்டிகள் பராமரிப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் விபத்து ,தொற்று பரவல் அபாய சூழல் அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அத்தியாவசிய பணிகளில் குடிநீர் விநியோகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனை முறையாக செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டி வருகின்றன. செயலாக்க நிலையில் உள்ள அரசுத்துறை அதிகாரிகளும், நடைமுறை பிரச்னைகளை காரணம்கூறி கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஜல்ஜீவன் மிஷன், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருந்த போதும் தண்ணீருக்காக மக்கள் பரிதவிக்கும் அவலம் பரவலாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நீடித்து வருகிறது. கணிசமான மழைப்பொழிவு உள்ள சூழலிலும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை.இந்நிலையில் சொற்ப அளவிலான குடிநீர் வினியோக பணியிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியப் போக்கு அப்பாவி மக்களை பாதிப்படைய செய்யும் அவலம் தொடர்கிறது. தண்ணீர் வினியோகத்திற்கான தரைநிலை, மேல்நிலை தொட்டிகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ளன. புதிய குழாய் அமைத்தல், தண்ணீர் வினியோக பைப் லைன் ஏற்படுத்துதல் என நிதி ஒதுக்கீட்டை செலவிடுவதில் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார நிலையில் இருப்போர் கவனம் செலுத்துகின்றனர். அனைத்து வகை தொட்டிகளையும் உரிய நேரத்தில் பராமரிப்பது இல்லை. பாசி படர்ந்த நிலையில் பல கிராமங்களில் அசுத்தம் கலந்த தண்ணீர் வினையாக பிரச்னை தற்போது வரை நீடிக்கிறது. இவற்றை மூடி மறைக்க முயற்சிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வதற்கான பணிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.இதனால் பராமரிப்பற்ற குடிநீர் தொட்டிகள், மழை நீர், அசுத்த நீர் தேங்கி கொசு, ஈ, புழு உற்பத்தி உள்ளிட்ட தொற்றுநோய் பரவலின் ஆதார மையமாக மாறி வருகின்றன. பெயர் அளவில் கூட குளோரினேஷன் பணிகள் நடப்பதில்லை. பெரும்பாலான மேல்நிலைத் தொட்டிகள் துாண்கள் சேதமடைந்து பக்கவாட்டு சுவர் விரிசல்களுடன் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து விபத்துகளையும் ஏற்படுத்த தவறுவதில்லை. இவற்றை பராமரிக்க செலவினை சீட்டை முன் வைக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அதனை முறையாக செயல்படுத்துவதில்லை.குடிநீர் தொட்டிகளை பராமரிப்பதுடன் விபத்து தொற்று பரவலை ஏற்படுத்தும் தொட்டிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

நியமனம் தேவை

உள்ளாட்சி அமைப்புகளில் மேல்நிலைத் தொட்டி பராமரிப்பதற்கான ஊழியர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மும்முனை மின்சார நேரத்தை கண்காணித்து மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல், வார்டு வாரியாக வினியோகித்தல் போன்ற பணிகளை ஆப்பரேட்டர்கள் கவனித்து வருகின்றனர். சிக்கனம் என்ற பெயரில் குறைந்தபட்ச பணிநேரத்தை நிர்ணயித்து இவர்களுக்கான சம்பளம் வழங்கலிலும் அரசு கருமித்தனம் காட்டுகிறது. துாய்மை காவலர்கள் துப்புரவு பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். தண்ணீர் தொட்டிகளை முறையாக கழுவுவதற்கென மாதத்தில் இரு நாட்கள் ஒதுக்கீடு செய்த போதும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை செயல்படுத்துவதில்லை.துஆசு, புழு கலந்த நிலையில் பல இடங்களில் குடிநீர் வினியோகம் நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாகவும், ஊராட்சி வாரியாகவும் குடிநீர் பராமரிப்பிற்கென ஊழியர் நியமிக்க வேண்டும். பரமசிவம்,கூலித்தொழிலாளி, கன்னிவாடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை