ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மனு
எழுதுவோர், மகளிர் சுய உதவிக் குழுவுக்கு போட்டியாக அதிரடியாக, கட்டணம்
குறைத்து, மனு எழுதிக் கொடுக்கின்றனர். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில்,
ஈரோடு தாலுகா அலுவலகம், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம், சமூக நல அலுவலகம்,
கலால் வரித்துறை அலுவலகம் மற்றும் கிளை சிறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்
அமைந்துள்ளன. ஜாதிச் சான்றிதழ், இருப்பிட, வருவாய், வாரிசு சான்றிதழ்கள்,
பட்டா மாறுதல், புது ரேஷன் கார்டு கேட்டும், பெயர் சேர்க்க, நீக்க உள்ளிட்ட
மாறுதல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு துறையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள்
பெறுவதற்காக, நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து
செல்கின்றனர்.தாலுகா அலுவலக வளாகத்தின் முன்புறம் சிலர் அமர்ந்து, மனுக்களை எழுதிக்
கொடுத்தனர். இவர்கள் அதிகம் பணம் வாங்குவதாக எழுந்த புகாரால், இப்பணியில்
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சுய
உதவிக்குழுவினருக்கு என, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டிடம்
கட்டித் தரப்பட்டது. வாழ்வுரிமைக்கான பொது நலச்சங்கம் என்ற அமைப்பை
ஏற்படுத்திய மனு எழுதுவோர், 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விண்ணப்பம்
எழுதிக்கொடுத்து வரும் தங்களையும், புதிய கட்டிடத்தில் அமர்ந்து மனு எழுத,
அனுமதிக்க வேண்டும் என கோரினர். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.நேற்று
தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்த இவர்கள், 'மனு எழுத ஐந்து ரூபாய் மட்டுமே
கட்டணம் வசூலிக்கப்படும்' என போர்டு வைத்து, பொதுமக்களுக்கு மனு எழுதிக்
கொடுத்தனர்.