| ADDED : ஜூன் 30, 2024 03:55 AM
ஈரோடு: பெருந்துறை பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன், மனநலம் பாதித்த ஒரு வாலிபர் யாசகம் பெற்று சுற்றி திரிந்தார். அட்சயம் அறக்கட்டளையினர் வாலிபரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மனநல காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்தனர். உடல் மற்றும் மனநிலையில் முன்னேற்றமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்பினார். வாலிபரின் பெயர் சையத் மொயின், 34; தந்தை பெயர் சையது மைதீன், அம்மா பர்வீன், சகோதரி சலேகா சுல்தானா உள்ளதாக கூறியுள்ளார். சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் கரீம் நகர், சாலுாரை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.டூவீலர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் மனநலம் பாதித்து, ஐதராபாத்தில் இருந்து ரயிலில் கோவை வந்துள்ளார். அங்கிருந்து நடந்து பெருந்துறை வந்து தங்கியதாகவும் தெரிவித்தார். அட்சயம் அறக்கட்டளையினர் ஈரோடு மாவட்ட போலீஸ் மூலமாக, ஆந்திராவில் இருந்த சையத் மொயின் பெற்றோரை தொடர்பு கொண்டனர். மகன் மாயமாகி இறந்து விட்டதாக கருதிய நிலையில், உயிரோடு இருப்பதாக தகவல் கிடைத்ததால், விரைந்து வந்தனர்.ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., ஜவகர், அறக்கட்டளை நிர்வாகி நவீன் ஆகியோர், சையத் மொயினை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மகனை பெற்றோர் கட்டித்தழுவி, சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.