| ADDED : அக் 08, 2011 01:32 AM
ஈரோடு: ''ஈரோடு மாநகர மக்களுக்கு அரசின் அனைத்து திட்டப் பயன்களையும்
பெற்றுத் தருவேன்,'' என, ஈரோடு மேயர் அ.தி.மு.க., வேட்பாளர் மல்லிகா
பரமசிவம் உறுதியளித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் மல்லிகா பரமசிவம் நேற்று
காசிபாளையம் பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் வழிகாட்டுதல் படி, வீதிவீதியாக சென்று
பிரச்சாரம் செய்தார். காசிபாளையம் நகரச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கட்சி
நிர்வாகிகள் பங்கேற்றனர். வேட்பாளர் மல்லிகா பரமசிவம் பேசியதாவது: தமிழக
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், ஏழை குடும்பத்தினருக்கு இலவச அரிசி,
இல்லத்தரசிகளுக்கு இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மாணவ, மாணவியருக்கு
இலவச லேப்டாப், 1கிராமப்புற ஏழை, எளியோருக்கு கறவை மாடுகள், ஆடுகள்
வழங்கும் திட்டம், படித்த ஏழைப் பெண்களின் வாழ்வு மலர 25 ஆயிரம் ரூபாய்
திருமண நிதியுதவியுடன், நான்கு கிராம் தங்கம் இலவசமாக வழங்கும் திட்டம்
உள்பட எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான்
தேர்ந்தெடுக்கப்பட்டால் இத்திட்டங்களை ஈரோடு மாநகர மக்களுக்கு முழுமையாக
கிடைக்கச் செய்வேன். இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.