ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த சமாஜ்வாடி கட்சி செயற்குழு மற்றும்
பொதுக்குழு கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்
போவதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஈரோட்டில் சமாஜ்வாடி கட்சி செயற்குழு
மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.அதில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சி
மாநிலத்தலைவர் இளங்கோ கூறியதாவது:சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு
ஆதரவாக செயல்பட்டோம். உத்திரப்பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதற்கு
நன்றிக்கடனாக, தமிழக சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணிக்கு
ஆதரவாக செயல்பட்டோம்.வரும் உள்ளாட்சி தேர்தல், திருச்சி மேற்கு சட்டசபை
தொகுதி ஆகிய தேர்தலில், சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும். எங்களுடைய
வாக்கு வங்கியின் நிலை பற்றி தேர்தலில் தெரிவிப்போம். பார்லிமென்ட் மழைகால
கூட்டத்தொடரில், பெட்ரோல், டீஸல், காஸ் விலையேற்றத்தை திரும்பப்பெறும்படி
வலியுறுத்துவோம். மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும், எஸ்.சி.,
எஸ்.டி., சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய
அரசை கேட்டுக்கொள்வோம்.தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கிறாம்.
எஸ்.சி.,- எஸ்.டி., சிறுபான்மையினர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள,
அவர்களுக்கான சலுகைகள் கிடைக்கப்பெற, ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த
வேண்டும். தமிழர்களை கொன்ற ராஜபக்சே அரசு மீது, பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம்.
மத்திய அரசு, இதை உடனே அமல்படுத்த வேண்டும், என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாநில பொதுச்செயலாளர்
நீலமேகம் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.