| ADDED : மே 04, 2024 07:25 AM
ஈரோடு, : வாகன புகை பரிசோதனை மையங்களில் புதிய செயலி மூலமே, வரும், 6 முதல் புகை பரிசோதனை சான்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் செல்வகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:வாகன புகை அதிகரிப்பால், காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த மாநில அளவில், 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் அனுமதி பெற்று இயங்குகின்றன. சில மையங்களில் வாகனங்களை பரிசோதனை செய்யாமல் சான்று வழங்கப்படுவதாக புகார் வருகிறது.இதன்படி கடந்த ஏப்.,13ல் மாநில அளவில் இவற்றில் சோதனை நடந்தது. இதில், 50 மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபரின்றி, வேறு நபர்கள் பணியில் இருந்தனர். கேமரா பொருத்தப்படாதது, உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது தெரியவந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இம்மையங்களை மேம்படுத்த, புகாரை தவிர்க்க தொழில் நுட்பங்கள் உருவாக்கி, 'PUCC 2,0 version' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் தனிப்பட்ட அலைபேசி உரிமைதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில், இந்த வெர்சன் நிறுவி ஜி.பி.எஸ்., வசதியுடன் இயங்கும். அந்த செயலி உள்ள அலைபேசி, வாகன பரிசோதனை மையத்தில் இருந்து, 30 மீட்டருக்குள் மட்டுமே செயல்படும். இம்முறை வரும், 6 முதல் மாநில அளவிலும், ஈரோடு மாவட்டத்திலும் அமலாகிறது. இந்த செயலி மூலம் மட்டுமே வாகன புகை பரிசோதனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மையங்கள் 'சீல்' வைக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.