ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், நடமாடும் நீர்மோர் வாகன துவக்க விழா, பெரியார் நகரில் உள்ள அமைச்சர் வீட்டில் நடந்தது. நடமாடும் நீர்மோர் வாகனத்தை துவக்கி வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இங்கு, நடமாடும் நீர் மோர் வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் அகற்றுவது என்பது தவிர்க்க முடியாதது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக புதிய மரங்கள் வைத்திருக்க வேண்டும். அல்லது அதே மரங்களை வேறு இடத்தில் நடவு செய்திருக்க வேண்டும். அந்த பணிகளை செய்தார்களா என தெரியவில்லை. தி.மு.க., சார்பில் நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம்.அதுபோல, கோவில் நிலம், வருவாய் துறை உள்ளிட்ட அரசு நிலங்களிலும் மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் துவங்கியதும் பல லட்சம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் வைக்க ஏற்பாடு செய்யப்படும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன், 3 முதல், ஆண்டு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கும். புதிதாக வீடு கட்டுபவர்கள், தங்களது வீடுகளில் போதுமான காலி இடவசதி இருக்கும் பட்சத்தில், அங்கு மரக்கன்றுகள் நட்டால் அதற்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில், 'சிசிடிவி' காட்சிகள் தடைபட்டது தொடர்பாக, கட்சியின் வக்கீல்கள், வேட்பாளர்களின் முகவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். ஒயர் இணைப்பில் பழுது இருந்ததை அடுத்து சரி செய்யப்பட்டுவிட்டது. அதில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினார்.தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலர் பிரகாஷ், தொ.மு.ச., கோபால், மாவட்ட துணை செயலர் செந்தில்குமார், மாநில நெசவாளர் அணி சச்சிதானந்தம், திருவாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.