பவானி: ''மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் பணம் வசூலிக்கும் மாநில அரசு அதிகாரிகள் பணம் வசூலிக்கின்றனர்,'' என, மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வரா வேதனை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தொட்டிபாளையத்தில், 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்னும், விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வரா துடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சியில், மத்திய அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், மத்திய அரசு நிதி, 60 சதவீத நிதி வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்தை மத்திய அரசின் திட்டம் என மாநில அரசு சொல்வதில்லை. 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம், சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்துக்கு மத்திய அரசு, 100 சதவீத நிதியை, மாநில அரசுக்கு வழங்கி விட்டது. ஆனால், மாநில அரசு அதிகாரிகள், பயனாளியிடம் பணம் பெறுவது வருத்தத்துக்குரிய செயல். இந்த யாத்திரை நிகழ்ச்சி கடந்தாண்டு நவ., 15ம் தேதி தொடங்கி வரும், 24ம் தேதி வரை நடக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை பட்டி தொட்டி வரை கொண்டு செல்ல வேண்டும். சுதந்திரமடைந்து நுாறாவது ஆண்டான, 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் வேண்டும் என்பதற்காக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, பல்வேறு திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு கவுரவ நிதியுதவி திட்டம், மண்வள அட்டை திட்டம், சொட்டு நீர் பாசன திட்டம், பயிர் காப்பீடு திட்டம் என ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு விவசாக் கடன் அட்டை, சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, விவசாயிகளுக்கு மண்வள அட்டை, சுகாதாரத் துறை அட்டை, இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், 46 பேருக்கு, 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜ., ஈரோடு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.