| ADDED : ஜன 09, 2024 10:35 PM
திருக்கோவிலுார், - அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் இரண்டு நாட்களில் ரூ.2.33 கோடி வர்த்தகமானது.அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து விவசாய விளைபொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்படுகிறது. தற்பொழுது பருவமழை பெய்து வரும் சூழலில், நெல் அறுவடை பணி சற்று தாமதம் அடைந்திருக்கும் நிலையில், உளுந்து அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.எனினும் நெல், உளுந்தின் வரத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் 595.26 மெட்ரிக் டன் அளவிற்கு விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் ரூ. 2. 33 கோடிக்கு வர்த்தகமானது.இந்தாண்டு உளுந்து பயிர் செழித்து வளர்ந்த நிலையில், பூ எடுத்து, காய் பிடிக்கும் தருவாயில் மழையின்றி வாடியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் உளுந்து வரத்து குறையும் என்பதால், அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. ஒரு மூட்டை உளுந்து நேற்றைய நிலவரப்படி உயர்ந்த விலையாக ரூ. 9,713ம், குறைந்த விலையாக ரூ.7,500க்கு விற்பனையானது.சராசரி விலையாக ரூ.9,689 இருந்தது. இது விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக விலை என்ற சூழலில், வரும் நாட்களில் உளுந்து வரத்தை பொருத்தே அதன் விலை அமையும் என்கின்றனர் வியாபாரிகள்.