| ADDED : ஆக 12, 2024 10:25 PM
உத்திரமேரூர் : உத்திரமேரூரில் 40,000 பேர் வசிக்கின்றனர். இங்கு இயங்கும் வட்டார அரசு மருத்துவமனையில், அப்பகுதியை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்கு வந்துசெல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில் அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.அம்மாதிரியான சமயங்களில், மேல்சிகிச்சைக்காகசெங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிகிச்சைக்கான நேர தாமதம் உள்ளிட்ட காரணங்களால் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.எனவே, உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, பல தரப்பு மக்களும் கோரி வந்தனர். இந்நிலையில், 2022ல் சட்டசபை கூட்டத் தொடரின் போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 136 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.அதில் ஒன்றாக, உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். 13,000 சதுர அடியில் கட்டப்படும் இந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள், கடந்த ஆண்டு துவங்கி தற்போது 80சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.தற்போது உள்ள மருத்துவமனையில், 32 படுக்கைகள் கொண்டு செயல்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பின் கூடுதல் படுக்கைகளுடன், மாதத்திற்கு 1,000 பேர் வரையிலான உள் நோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட உள்ளதாகவும் பணிகள் விரைவாக நிறைவு பெற்று அடுத்த ஓரிரு மாதங்களில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும், உத்திரமேரூர் வட்டார மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.