காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 38; கம்ப்யூட்டர் மெக்கானிக். இவரது மனைவி டில்லிராணி, 33, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஏழு வயதில் மகளும், மூன்று வயதில் மகனும் உள்ளனர்.மேகநாதனுக்கும், டில்லிராணிக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில்,, நேற்று முன்தினம், மதியம் 2:30 மணி அளவில், சாலை தெருவில் இருக்கும், அரசுடமை வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுத்து விட்டு வெளியே வரும் போது, காவலர் சீருடையில் இருந்த டில்லிராணியை, மேகநாதன் வழி மறித்து, கை மற்றும் கால் ஆகிய பகுதிகளில், கத்தியால் வெட்டி உள்ளார்.ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், தீவிர சிகிச்சைக்கு, டில்லிராணி, சென்னைஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேகநாதனை தேடி வந்தனர். இந்நிலையில், மேகநாதனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை முயற்சிக்கான காரணம் விசாரணைக்கு பின் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.