| ADDED : மே 28, 2024 11:53 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில், விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சஞ்சீவிராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள 'தாதசமுத்திரம்' என அழைக்கப்படும், இக்கோவில் தெப்ப குளத்தின் அருகில், நடவாவி கிணறு உள்ளது.பூமிக்கடியில் அழகிய மண்டபத்தின் நடுவில், கிணறு அமைந்துள்ளது. கிணற்று தண்ணீர் மண்டபம் முழுதும் நிறைந்திருக்கும். மண்டபம் உள்ளே செல்வதற்கு கருங்கற்களால் ஆன படிகள் கட்டப்பட்டுள்ளன. கிணற்றின் மேல்பகுதியில் இருந்து பார்த்தால் தண்ணீர் மட்டுமே தெரியும்.ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்டு, மண்டபம் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்படும். பல்வேறு சிறப்பு வாய்ந்த நடவாவி கிணற்றை காண்பதற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கிணற்றின் தளத்தில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்களால் கிணற்றின் மேல்பகுதி வலுவிழந்து நாளடைவில் இடிந்து விழும் நிலை உள்ளது.எனவே, கிணற்றின் தளத்தில் முளைத்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.