| ADDED : பிப் 09, 2024 11:05 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடம். இக்கட்டடம் ஒவ்வொரு முறையும் சீரமைக்கும் போது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்து வந்தனர்.ஆனால், கேமராக்கள் அமைப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமலேயே இருந்தனர். தேர்தல் சமயத்தில் இரு மாதங்களுக்கு மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவை அகற்றப்படுவது வழக்கம். ஆனால், நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமலேயே கலெக்டர் அலுவலகம் இயங்கி வந்தது. இதனால், பாதுகாப்பு குறைபாடுடன் கலெக்டர் அலுவலகம் இயங்குவதாக ஊழியர்கள் புலம்பி வந்தனர். சாதாரண பெட்டிக்கடை முதல் பெரிய அளவிலான வணிக வளாகம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் நிலையில், மாவட்ட நிர்வாக தலைமை அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் கேமராக்கள் இல்லாமல் இருந்தது. கடந்தாண்டு, வருவாய் துறை நிதியில், 5 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தும் பணிகள் நடந்தன. அப்போது கூட, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 14 கண்காணிப்பு கேமராக்கள், கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர், செல்வோர் என, அனைவரையும் கண்காணிக்க முடியும்.