| ADDED : நவ 17, 2025 08:08 AM
கரும்பாக்கம்: மிளகர்மேனி - தென்பாதி சாலையில் சேதம் அடைந்த சிறுபாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சத் திற்குள்ளாகி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, மெய்யூர் வழியாக செங்கல்பட்டு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், தென்பாதி அடுத்த, மிளகர் மேனியை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், அச்சாலையை கடந்து செல்லும் வகையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுபாலம், சில ஆண்டுகளுக்கு முன் சேதமாகி சாலை நடுவே ஓட்டை ஏற்பட்டது. இதனால், அச்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வந்தனர். இதனிடையே, சேதமான சிறுபாலம் சீரமைப்பு பணி கடந்த ஆண்டில் நடந்தது. எனினும், அப்பணி தரம் குறைவு காரணத்தால், தற்போது மீண்டும் சேதமாகி அப்பகுதி பள்ளமாகி வருகிறது. எனவே, இந்த சிறுபாலம் பகுதியை தரமான முறையில் சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மிளகர்மேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.