மோகனுார்: மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வரும், 15ல் குண்டம் இறங்கி, அம்மனுக்கு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.மோகனுார் நகரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 1ல், இரவு, 11:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்கின்றனர். தினமும் மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷகம், ஆராதனை நடக்கிறது. சுவாமி வெள்ளி கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வரும், 14 இரவு, 9:00 மணிக்கு வடிசோறு வைத்து சுவாமிக்கு படையல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. 15 அதிகாலை, 5:00 மணிக்கு பூக்குழி பூஜை நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.ஏப்., 16 காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டு, 9:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி சுவாமிக்கு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அன்று இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு கம்பம் பிடுங்கி, ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 17 மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.