கரூர் கரூரில், கோரை உற்பத்தி சரிவு ஏற்பட்ட நிலையில் கூட, விலை அதிகரிக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தில் வாங்கல், என்.புதுார், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாய்பாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர், மரவாப்பாளையம், புதுப்பாளையம், திருமாகூடலுார், அச்சமாபுரம், சோமூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரை புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கான்கிரீட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது. பாசன வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், கோரை புல் உற்பத்தி சரிந்தும் விலையில் மாற்றமில்லை என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இது குறித்து, கரூர் நெரூரை சேர்ந்த கோரை புல் விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு கோரை உற்பத்தி நன்றாக இருந்த போது, 16 இன்ச் கொண்ட ஆறு கோரை புல் கட்டுகள், 1,300 ரூபாய் வரை விலை போனது. தற்போது, உற்பத்தி குறைந்த நிலையில் விலையில் மாற்றம் இல்லாமல், 1,300 ரூபாய் கிடைக்கிறது. இடைத்தரகர்கள் மூலம் கோரை புல்லை விவசாயிகள் விற்க முடிகிறது. நேரடியாக விற்பனை செய்ய வழியில்லை. உற்பத்தி சரிந்தும் கூட, அதற்குரிய பலன்கள் கிடைக்கவில்லை. தற்போது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், இனி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது விலை வீழ்ச்சி ஏற்படும். நெல்லுக்கு கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது போல, கோரை புல்லுக்கும் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்க வேண்டும். அப்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு கூறினர்.