| ADDED : பிப் 15, 2024 11:45 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., நடுப்பட்டி சுப்பன் ஆசாரி களத்தில், 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அப்பகுதியில் உள்ள கன்னி வாய்க்காலை குளிப்பதற்கும், கால்நடைகள் மற்றும் இதர பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கன்னி வாய்க்காலை தனிநபர் ஒருவர் வேலி அமைத்து தடுத்துள்ளார். இது குறித்து தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர். அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேறறு காலை, 11:00 மணியளவில் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் சி.பி.ஐ., கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக வந்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 4:00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆர்.டி.ஓ., ரவி, இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆர்.டி.ஓ., அந்த இடத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதையடுத்து, பொதுமக்கள், சி.பி.ஐ., கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.