| ADDED : ஜன 25, 2024 10:35 AM
கரூர்: கரூர் மாநகராட்சி பல இடங்களில் விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத்தடைகளால் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் மாநகராட்சி பகுதிகளில் விபத்துகளை தடுப்பதற்காக பள்ளிகள், மருந்துவமனைகள், சாலை சந்திப்புகள், மக்கள் அதிகமாக கடந்து செல்லும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை அமைப்பதற்கு முன் அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும், 10 மீட்டர் துாரத்துக்கு முன்பாக வெள்ளை பெயின்டால் எச்சரிக்கை கோடு போட வேண்டும். அதன் பின் வேகத்தடை அமைக்கும்போது அது, 10 செ.மீ. உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அந்த உயரத்திலிருந்து 1.45 மீட்டர் வீதம் இருபுறமும் சரிவு கொடுக்க வேண்டும். அதன் மீது வெள்ளை பெயின்டால் கோடு போட்டு அடையாளப்படுத்த வேண்டும். வேகத் தடைக்கான சரிவு துவங்கும் இடத்தில் ஒளிரும் டிவைடர் (ஒளிர் பட்டை) விளக்கு பொருத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை விதி உள்ளது. ஆனால், முக்கிய சாலைகளில் மட்டுமே விதிமுறைகள் பெரும்பாலும் பின் பற்றப்படுகின்றன. உட்புற சாலைகள், கிளை சாலைகள், புறநகர் பகுதிகளில் பெரும்பாலும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன. தற்போது கரூர் பழைய அரசு மருத்துவமனை, கரூர் மாநகராட்சி குமரன் பள்ளி, பழைய நீதிமன்றம் ஆகிய சாலையில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை கோடு, ஒளிரும் டிவைடர் வைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமல்லது, நான்கு சக்கர வாகனங்களும், அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக சென்றால், கட்டுப்பாட்டை இழுந்து விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. இவை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருப்பதால், வாகனம் நிலை தடுமாறும் போது உயரிழப்பு ஏற்படும் ஆபத்து காத்திருக்கிறது. உடனடியாக விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத் தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வெள்ளை வண்ணம் போன்ற முன்னெரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.