| ADDED : ஜன 06, 2024 06:09 AM
மதுரை; கடும் நிதித்தட்டுப்பாட்டால் சிக்கி தவித்து சம்பளம் கூட வழங்க முடியாத மதுரை காமராஜ் பல்கலையில், சம்பள மறுநிர்ணயம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இரட்டிப்பு செலவினங்களை தவிர்க்க உயர்கல்வி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இப்பல்கலையில் 2018க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பல்கலை விதிப்படி சம்பள நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள நிர்ணயிக்க வேண்டும் என உயர்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையே '2018க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அரசு உத்தரவுப்படி சம்பள நிர்ணயம் செய்யலாம். 2018க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதே நிலை தொடரட்டும்' என சிண்டிகேட், செனட் தீர்மானங்கள் நிறைவேற்றின. இந்நிலையில், பல்கலையில் நிலவும் நிதித்தட்டுப்பாட்டால் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மாநில அரசின் மானியத்தை பல்கலை எதிர்பார்த்த போது '2018க்கு முன் நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு அவர்கள் பணியேற்ற நாள் முதல் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்யுங்கள்' என அதிகாரிகள் கண்டிப்பு காட்டினர்.இதனால் துணை பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் என 186 பேருக்கு சம்பள மறுநிர்ணயம் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நீதிமன்றம் சென்று பல்கலை உத்தரவை ரத்து செய்தனர்.மூத்த பேராசிரியர்கள் கூறியதாவது: இதே பிரச்னை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு ஏற்பட்டபோது, அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் பெற்ற உத்தரவையே அனைவருக்கும் ஏற்றாக கருதி அப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்பல்கலையில் 186 பேரும் தனித்தனியே உத்தரவு பெற வேண்டும் என பல்கலை நிர்வாகம் வலியுறுத்துகிறது. இதற்காக பாதிக்கப்பட்டவர்களும், பல்கலையுமே வழக்கு செலவை எதிர்கொள்கின்றனர்.இரண்டு மாதங்களாக சம்பளம் கிடைக்காத அலுவலர்களும், நிதித்தட்டுப்பாட்டில் தவிக்கும் பல்கலைக்கு தேவையின்றி ஆகும் இரட்டிப்பு செலவை தவிர்க்கலாமே. உயர்கல்வி அதிகாரிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.