| ADDED : மார் 04, 2024 05:56 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 2002ல் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.120 கோடி மதிப்பிலான ஆண்டிபட்டி - சேடப்பட்டி வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. வைகை அணை அருகே உள்ள பிக்கப் டேமில் தண்ணீர் எடுக்கப்பட்டு, அதனருகே மையம் அமைத்து அங்கிருந்து சுத்திகரிப்பு செய்து நாளொன்றுக்கு 2.40 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.இதன் மூலம் சேடப்பட்டி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள், டி.கல்லுப்பட்டி ஒன்றியதாதில் 42 ஊராட்சிகளுக்கும், கள்ளிக்குடி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளுக்கும், எழுமலை, பேரையூர், டி கல்லுப்பட்டி பேரூராட்சிகளுக்கும் சுத்திகரித்த குடிநீர் தினமும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.குடிநீர் வினியோகம் ஆண்டிபட்டியில் இருந்து பூமிக்கு அடியில் பைப் லைன்கள் பதிக்கப்பட்டு செய்யப்படுகின்றன. இந்த பைப்புகள் அவ்வப்போது உடைவதும், அதை ஊழியர்கள் சரி செய்தும் குடிநீர் விநியோகித்தனர். பைப் லைன்கள் பதித்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் சில மாதங்களாக பைப்புகள் அடிக்கடி உடைவது தொடர்கதை ஆகிவிட்டது.வைகை குடிநீர் திட்ட அதிகாரிகள் அவ்வப்போது சரி செய்து குடிநீர் விநியோகித்தாலும், தொடர்ந்து குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் பதித்த பைப்புகள் காலாவதியாகி விட்டதால் அடிக்கடி உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. சில பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய பைப் லைன்களாக மாற்றி சீரான குடிநீர் வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.