நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 26 டன் காய்கறிகள், 11.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 152 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 20,455 கிலோ காய்கறிகள், 5,075 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள், 400 கிலோ இதர காய்கறிகள், என, மொத்தம், 25,950 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.அவற்றை, 5,560 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 11 லட்சத்து, 24,300 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 60 ரூபாய், கத்தரி, 50, வெண்டை, 36, சின்ன வெங்காயம், 55, பெரிய வெங்காயம், 46 ரூபாய்க்கு விற்பனையானது.