நாமக்கல், தமிழக துணை முதலவர் உதயநிதி பிறந்த நாளில், நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த, 17 குழந்தைகளுக்கு, எம்.பி., ராஜேஸ்குமார் தங்க மோதிரம் அணிவித்தார்.தி.மு.க., இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி பிறந்த நாளான, நேற்று முன்தினம், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என, மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிறந்த, 12 குழந்தைகள், ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த, 5 குழந்தைகள் என, மொத்தம், 17 குழந்தைகளுக்கு, மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார், எம்.பி., தங்க மோதிரம் அணிவித்து, பெற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.ராசிபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் யோகராஜன் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.