நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. அவற்றில் வசித்து வரும் மக்களிடம், தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில், நகராட்சி நிர்வாகம் மூலம், வரி வசூல் செய்யப்படுகிறது. அதன்படி, தற்போது வரை, 60 சதவீதம் தொகை மட்டுமே வசூலாகி உள்ளது. மீதமுள்ள, 40 சதவீதம் நிலுவையாக உள்ளது. இவற்றில் குறிப்பாக தொழில்வரி மட்டும் மிகவும் குறைந்தளவே வசூல் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களில் பெரும்பாலானோர், வரி, கட்டணங்களை, மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகின்றனர். தங்களது வரி, கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும், உடனடியாக நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் கூறியதாவது:-நாமக்கல் நகராட்சியில் வரி செலுத்துவதற்காக, பொதுமக்களின் வசதிக்காக, தினமும் காலை, 8:30 முதல், இரவு, 7:00 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வரிவசூல் பணி நகராட்சி அலுவலகம் மற்றும் மோகனுார் சாலையில் உள்ள கணினி வரி வசூல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு, நகராட்சி பணியாளர்கள் மூலம் துண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜப்தி நடவடிக்கை உள்ளிட்டவை மூலம், சட்டரீதியாக வரி வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.