| ADDED : ஜன 03, 2024 12:55 PM
பள்ளிப்பாளையம்: சமயசங்கிலி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு, பொங்கல் பண்டிகை அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.பள்ளிப்பாளையம் அடுத்த சமயசங்கிலி, கரமேடு, தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள், பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், இப்பகுதியில் விளைந்துள்ள கரும்புகளை பார்வையிட்டு தரத்துக்கேற்ப கொள்முதல் செய்கின்றனர். சமயசங்கிலி கரும்புக்கு தனி சுவை உள்ளதால், பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது, அறுவடைக்கு தயாராகியுள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்.இதுகுறித்து, சமயசங்கலியை சேர்ந்த கரும்பு விவசாயி ஸ்ரீதர் கூறியதாவது:சமயசங்கிலி சுற்றுவட்டாரத்தில் இந்தாண்டு, 100 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்தாண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்தளவு வந்துள்ளது. சில நாட்களாக, மொத்த வியாபாரிகள் விளைநிலத்திற்கு நேரடியாக வந்து கரும்புகளை பார்வையிட்டு சென்றுள்ளனர். அடுத்த வாரம் முதல் கரும்பு அறுவடை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.