பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில், சாலையில் வந்த காரை யானை தந்தத்தால் குத்தி தாக்கிய சம்பவத்தால் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் இரண்டு யானைகள் தனித்தனியாக உலா வந்து, பொதுமக்களையும் வாகன ஓட்டுனர்களையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, கூடலுார் அத்திப்பாளி பகுதியை சேர்ந்த, சன்னி 60, அவரது மனைவி மேரி,50, மற்றும் 11 மாத பேரக் குழந்தையுடன், முள்ளன்வயல் என்ற இடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, அத்திப்பாளி நோக்கி காரில் சென்றுள்ளனர்.அப்போது எதிரே சாலையில் நடந்து வந்த ஒற்றை ஆண்யானை, ஆக்ரோஷத்துடன் வந்து காரை தந்தத்தால் குத்தி தாக்கியது. காரின் ஒரு பகுதி முழுமையாக சேதம் அடைந்ததுடன், காரினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் யானையை சப்தம் எழுப்பி சாலையோர வனப்பகுதிக்குள் துரத்தினர். காருக்குள் இருந்தவர்களை மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 'யானைகள் இரண்டும் பகல் நேரங்களில் வாகனங்களை தாக்குவதுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால், இரண்டு யானைகளையும் முதுமலை அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என, வலியுறுத்தினர். தொடர்நது, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் அரவிந்த் அரசு, டி.எஸ்.பி. சரவணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், 'முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு இரண்டு யானைகளையும் அடர் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிவிரைவு மீட்பு குழுவினர் மற்றும் கூடுதலான வனக் குழுவினர் நெலாக்கோட் டை பகுதியில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.யானையால் பாதிப்பு ஏற்பட்டவருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால், தமிழகம்-கேரளா இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.