| ADDED : ஜன 25, 2024 12:09 AM
ஊட்டி : ஊட்டி அருகே, அறைஹட்டி கிராமத்தில் முகாமிட்ட யானை கூட்டத்தால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட அறை ஹட்டி, துாதுார்மட்டம் பகுதிகளில் வனத்தை ஒட்டி யானைகள் சுற்றித்திரிகின்றன.கடந்த மூன்று நாட்களாக மேல் நோக்கி நகர்ந்து அறைஹட்டி கிராம பகுதிக்கு வந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. யானை கூட்டம் நேற்று குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின், பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று, பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனினும், யானை கூட்டம் அறைஹட்டி பகுதி தேயிலை தோட்டத்தில் முகாமிட்டன. இதனால், அப்பகுதிக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்க செல்லவில்லை. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.