| ADDED : ஜூன் 14, 2024 01:57 AM
ஓமலுார், துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க கூடாது என, பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.சேலம் பெரியார் பல்கலையில், 2021 ஜூலையில் துணைவேந்தராக பொறுப்பேற்ற ஜெகநாதன், இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று, தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட மனு:துணைவேந்தர் ஜெகநாதன் பதவி ஏற்றது முதல், சர்ச்சைக்குரிய செயல்களை முன்னெடுத்து வருகிறார். பல்கலை உபகரண கொள்முதலில் ஊழல்; பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றாமை; விதிமீறி தனிப்பட்ட பயணங்களுக்கு பல்கலை நிதியை செலவு செய்தது; அரசு அனுமதியின்றி பல்கலையில் தனியார் நிறுவனத்தை தொடங்கியது; தொழிலாளர், ஆசிரியர்களை மிரட்டி, 'மெமோ' வழங்குவது, 'சஸ்பெண்ட்' செய்வது; சங்க நிர்வாகிகளை பழிவாங்குதல் உள்ளிட்ட தன்னிச்சை செயல்பாடுகள் தொடர்கின்றன.முன்னாள் பதிவாளர் தங்கவேலுடன் இணைந்து அரசு அனுமதியின்றி, இரு நிறுவனங்களை தொடங்கியதாக, கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிந்து ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின் நிபந்தனை ஜாமினில் வந்தார். பல்கலையில் நடந்த முறைகேடுகளை விசாரித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழுவினர், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி விசாரணை அறிக்கையை அரசுக்கு அளித்தனர்.இந்நிலையில் இம்மாத இறுதியில் பணி நிறைவு பெற உள்ள ஜெகநாதன், பணி நீட்டிப்பு பெற முயற்சித்து வருகிறார். போலீஸ் துறையின் குற்ற வழக்கு நிலுவை மற்றும் அரசின் உயர்மட்ட குழு விசாரணை அறிக்கை நிலுவை ஆகியவற்றில் சிக்கியுள்ள ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்க கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் ஜெகநாதன் பணியில் இருந்த, 3 ஆண்டுகளில் நடந்த முறைகேடு, விதிமீறல், ஊழல் என, 500 பக்க ஆவணங்களை, 'பார்சல்' ஆகவும் அனுப்பியுள்ளனர்.