| ADDED : மே 18, 2024 01:26 AM
இடைப்பாடி: பூலாம்பட்டி காவிரி கரையோரம் விசைப்படகுகள் நிறுத்த வசதியாக, தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கியது.சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து, அதன் மறுகரைக்கு செல்ல, விசைப்படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. அங்கு, 2022 அக்., 15ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், விசைப்படகுகள் நிறுத்துவதற்கு கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் விசைப்படகுகள், வேறு பகுதியில் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.நேற்று முன்தினம் அங்குள்ள கதவணை பராமரிப்புக்கு, தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் உள்ளது. மேலும் கதவணை ஷட்டர் பராமரிப்புக்கு, விசைப்படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இச்சூழலை பயன்படுத்தி, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை அகற்றிவிட்டு தமிழக அரசு நிதி, 86 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டும் பணியை நேற்று தொடங்கியது. இப்பணி, 10 நாளில் முடிக்கப்படும். தடுப்புச்சுவர் கட்டி முடித்த பின் அங்கு விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு பயணியர் சிரமமின்றி பயணிக்கலாம் என, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜீவானந்தம் தெரிவித்தார்.