| ADDED : ஜூன் 29, 2024 02:00 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே துலுக்கனுார் மக்களுக்கு, வசிஷ்ட நதியின் தென்பகுதியில் பொது மயானம் உள்ளது. ஆனால், இறந்தோர் உடலை எடுத்துச்செல்ல வசிஷ்ட நதியை கடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மயான பகுதியொட்டி தடுப்பணை உள்ளதால் மழை காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வசிஷ்ட நதியில் மேம்பாலம் கட்டித்தர வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், துலுக்கனுார் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா செயலர் முருகேசன் தலைமை வகித்தார். அதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக வசிஷ்ட நதி பகுதியில், இறந்தவர் போன்று உருவ பொம்மை தயாரித்து அதற்கு பாடை கட்டி, இந்திரா நகரில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஆத்துார் டவுன் போலீசார், மேளம் அடிக்காமல் செல்லும்படி கூறினர். பின், பாடையை இறக்கி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் இதுதொடர்பான மனுவை, வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேலிடம் கொடுத்தனர்.