சேலம், :குழந்தையை தத்தெடுக்கலாம் என கூறி, விருதுநகர் மாவட்ட தம்பதியிடம், 3 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், இன்ஸ்பெக்டராக நடித்த, ஈரோடு வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார், குருசாமிபுரத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பாதமுத்து, 43. இவரது மனைவி பூண்டிமாதா, 40. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்த அருண்குமார், 28, சட்டப்படி குழந்தையை தத்தெடுக்கலாம் என கூறி, பணம் செலவாகும் என தெரிவித்தார். அதை நம்பிய தம்பதியர், 3 லட்சம் ரூபாயுடன், சேலம் வந்து, கருப்பூர் அருகே அருண்குமாரிடம் பணம் கொடுக்க முயன்றனர்.அப்போது காரில் வந்த மர்ம கும்பல், ஈரோடு போலீசார் என கூறி, 3 லட்சம் ரூபாயை பறித்துச்சென்றனர்.கருப்பூர் போலீசார் விசாரித்து, சேலம், அன்னதானப்பட்டி மதுராஜ், 37. தாதகாப்பட்டி ஏசுராஜ், 27, ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான, அருண்குமார், கூட்டாளி பழனிபாரதி, 26, ஆகியோர், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து, போலீசார் விசாரித்ததில் இன்ஸ்பெக்டராக நடித்தவர், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வெற்றிவேல், 48, என தெரிந்தது. ஈரோடு சென்ற போலீசார், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, வெற்றிவேலை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வெற்றிவேல் தான் பணத்தை பறித்துள்ளார். அவரது தந்தை மாரிமுத்து, சேலம் மாவட்டத்தில் ஏட்டாக பணியாற்றி, 2023ல் ஓய்வு பெற்றவர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடுகிறோம்' என்றனர்.