| ADDED : ஜன 17, 2024 10:44 AM
சேலம்: ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி - சேலையை குறைவாக வழங்கிவிட்டு, விற்பனை முனையத்தில் அதிகம் வழங்கியதாக, பதிவேற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக வினியோகித்தது போக, மீதி கரும்புகளை தலா, 24 ரூபாய்க்கு விற்று பணத்தை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது கடை விற்பனையாளருக்கு சிரமங்களை ஏற்படுத்தும். மீதி கரும்புகளை, ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்க நிர்வாகம் பெற்றுக்கொள்ள வேண்டும்.இலவச வேட்டி - சேலைகளை குறைவாக வினியோகித்து விட்டு ரேஷன் கடை விற்பனை முனையம் (பாயின்ட் ஆப் சேல்) கருவியில், அதிகம் வழங்கியது போல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்தாண்டு வழங்கியது போக, வேட்டி - சேலை மீதம் இருப்பதாக, விற்பனை முனையம் காட்டும் தவறை சரி செய்ய வேண்டும். மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு, வேட்டி- சேலை பணிக்கு தலா, 20 ரூபாய் வீதம் ரேஷன் பணியாளருக்கு, 60 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.