| ADDED : ஜூலை 09, 2024 05:18 AM
சிவகங்கை: பள்ளி, கல்லுாரி மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தவும், வாசிப்பு திறனை வளர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் 2 லட்சம் புத்தகங்கள் உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கலெக்டர் பேசியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியும் பெற, மாவட்ட நிர்வாகம் வசதி செய்துள்ளது. மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் சார்ந்த புத்தகங்களும், தமிழ், ஆங்கில நாளிதழ் படிக்க ஏதுவாக அனைத்து நுாலகங்களிலும் போதிய புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நகரங்களில் நுாலகத்துடன் கூடிய அறிவுசார் மையங்களும் செயல்படுகிறது. மாணவர்கள் வேண்டிய புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க ஏதுவாக நுாலக உறுப்பினர் திட்டமும் செயல்படுகிறது. இதற்கான சந்தா தொகையை கூட மாவட்ட நிர்வாகம் வழங்க திட்டமிட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் மட்டுமே 2 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இங்கு குடிமைபயிற்சி மையம் அமைத்து அதற்கேற்ப புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இவற்றை மாணவர்கள் பயன்படுத்தி, பொது அறிவுத்திறனை வளர்ப்பதோடு, வாசிப்பு திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும், என்றார். மாணவர்களுக்கு நுாலக சந்தா உறுப்பினர் அட்டையை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நுாலக அலுவலர் ஜான்சாமுவேல் வரவேற்றார். நுாலகர் முத்துக்குமார், கனகராஜ், நுாலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள் ரமேஷ்கண்ணன், ஈஸ்வரன், முத்துக்கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், ஓவியர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.