| ADDED : ஜூலை 19, 2024 11:56 PM
சிவகங்கை : அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடை நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நாளை (ஜூலை 21) நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வினை சிவகங்கையில் 455 பேர் எழுத உள்ளனர்.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு செய்தது.இதற்கான தகுதி தேர்வு நாளை (ஜூலை 21) அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை 200 வினாக்களுக்கு கொள்குறி வகையில் பதில் அளிக்கும் விதத்தில் தகுதி தேர்வு நடைபெறும்.சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 11 தேர்வு மையங்களில் 220 பேரும், சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் உள்ள 12 தேர்வு மையங்களில் 235 மாணவர்களும் என 455 பேர் இத்தேர்வினை எழுத உள்ளனர். அடையாள அட்டை அவசியம்
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது: தேர்வு அறைக்கு காலை 9:30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதற்கு பின் அனுமதிக்க முடியாது. நுழைவு சீட்டுடன், ஆதார், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்று ஏதேனும் ஒரு அடையாள அட்டை, கருப்பு பந்து முனை பேனாவுடன் தேர்வு அறைக்கு வரவேண்டும். ஒரு அறையில் 20 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்படுவர். தேர்வினை நடத்தும் முறை குறித்து அதிகாரிகளுக்கு, இணை இயக்குனர் செல்வகுமார் ஆலோசனை அளித்தார் என்றார்.