| ADDED : அக் 08, 2011 11:00 PM
காரைக்குடி : மக்களுக்கு நல்லது செய்திருந்தால், அம்மனை வணங்க வேண்டிய பரிதாப நிலை ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்டிருக்காது என, இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் நல்லகண்ணு பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி தலைவர் தே.மு.தி.க., வேட்பாளர் பர்வதரெஜினா பாப்பாவை ஆதரித்து, அவர் பேசியதாவது:இந்நகரில் படித்தவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள், பண்பாளர்கள், தமிழ் பண்பாடு உடையவர்கள் பலர் உள்ளனர். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் பரவி உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த ப.சிதம்பரம் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் என பதவி வகித்தவர். இப்போது, தேனி அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளார். அவர் ஏன்? அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஓட்டு போட்ட மக்களை புறக்கணித்து விட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராததால் தான் அவருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க., - காங்., கூட்டணி கிடையாது. ஆனால், காரைக்குடியில் மட்டும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர். இவ்வளவு செல்வாக்கு உள்ளவர்கள் இந்த ஊரில் அடிப்படை வசதிகள் செய்யாமல் ஏன்? புறக்கணிக்க வேண்டும். இந்த கேள்விக்கு விடை காணும் வகையில் காரைக்குடியில் தே.மு.தி.க., வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார், என்றார்.