உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கடல் போல காட்சியளிக்கும் மாரநாடு கண்மாய்

 கடல் போல காட்சியளிக்கும் மாரநாடு கண்மாய்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய்க்கு தொடர்ச்சியாக நீர்வரத்து காரணமாக கண்மாய் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான மாரநாடு கண்மாயை நம்பி மாரநாடு, வெள்ளிக்குறிச்சி, கச்சநத்தம், விளத்துார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் நீர் வரத்து இருந்தது. அதன்பின் நவம்பர் 2 முதல் ஆறாம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாரநாடு கண்மாய் பாசனத்திற்காக லாடனேந்தலில் கட்டப்பட்ட தடுப்பணை மூலம் கண்மாய்க்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. 2014ல் ஆறு கோடி ரூபாய் செலவில் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் துார் வாரப்பட்டதுடன், 2020ம் ஆண்டிலும் 97 லட்ச ரூபாய் செலவிலும் துார் வாரப்பட்டது. ஒரு மாத காலத்தில் கண்மாய் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. கண்மாய் நிரம்பியதால் அதனை நம்பியுள்ள விவசாயிகளும் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கண்மாய் தூர் வாரப்பட்டதால் தண்ணீர் நிரம்பி இருப்பது கடல் போல காட்சியளித்து வருகிறது. கண்மாய் நிரம்பி இருப்பதால் தண்ணீரில் உள்ள மீன்களை உண்ண ஏராளமான பறவைகளும் வந்த வண்ணம் உள்ளது. காலையில் இரை தேடிச் செல்லும் பறவை கூட்டங்கள் மாலையில் கண்மாய் அருகில் உள்ள மரங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. கண்மாய் நிரம்பி இருப்பதால் இந்தாண்டு நெல் விளைச்சல் முழுமையடையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை