| ADDED : டிச 29, 2025 06:54 AM
திருப்புத்தூர்: மாவட்ட அளவில் 25 கண்மாய்களில் வனத்துறை, கல்லுாரி மாணவர்கள் சார்பில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. - நேற்று முன்தினம் வேட்டங்குடி பறவைகள் சரணாலய கொள்ளுகுடி பார்வையாளர்கள் மையத்தில் திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ.கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று காலை 6:00 மணி முதல் சரணாலய பறவைகள் அதிகமாக வலசை போகும் கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடி, மாதவரயான்பட்டி, சித்த, அய்யாபட்டி உட்பட 9 கண்மாய்களில் கணக்கெடுப்பு நடத்தினர். வனத்துறை,மாணவர்கள் 9 குழுக்களாகப் பிரிந்து 25 கண்மாய்களில் இப்பணியை செய்தனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வித்தியாசமான வெளிநாட்டு பறவைகளை தொலைநோக்கி மற்றும் மெர்லின் செயலி மூலம் கணக்கெடுப்பு செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறியதாவது, பறவைகளை தொலைநோக்கி, மெர்லின் செயலி மூலம் பறவைகளின் ஒலிகளை அடையாளம் கண்டு கணக்கெடுத்தனர். இதில் நத்தை கொத்தி நாரை, அரிவாள் மூக்கன், பாம்புதாரா, மஞ்சள் மூக்கன் நாரை, உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, கரண்டிவாயன் உட்பட பல்வேறு வகை பறவைகள் கண்டறிந்தனர். வெளிநாட்டு பறவைகளும் தென்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பறவைகள் கணக்கெடுப்பிற்கு உள்ளாகியுள்ளது என்றார்.