| ADDED : ஜூன் 30, 2024 05:11 AM
கம்பம், : இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது ரோட்டில் பட்டாசுகளை வெடிப்பதும், மாலைகளை வீசுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கம்பம், சின்னமனூர் அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது வீட்டிலிருந்து சுடுகாடு வரை வீதிகளில் பட்டாசு வெடிப்பதும், பிரேத வண்டியில் உள்ள மாலைகளை ரோட்டில் வழி நெடுக வீசி செல்வது அதிகரித்து வருகிறது. இவை தவிர திருமணம், கும்பாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வோர் இறுதி ஊர்வலத்தில் வீசிய மாலைகளின் மீது நடந்து செல்ல வேண்டியுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் மீதும் வீசுகின்றனர். குறிப்பாக புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கிராமங்களில் நெடுஞ்சாலையில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.சின்னமனூரில் கோயில் திருவிழா ஊர்வலம் செல்லும் போது மெயின் ரோட்டில் பட்டாசுகள் வெடிப்பதால் , வர்த்தகர்கள் கடைகளை அடைக்க வேண்டிய நிலை எழுகிறது. சாமி ஊர்வலங்களின் போது, கடும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் அனைத்து ஊர்களிலும் அரசியல் கட்சிகள், ஜாதி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, பூ மாலைகள் ரோட்டில் வீசுவதை தடுக்கவும், பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் வேண்டும். மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளில் பூ மாலைகளை வீசி செல்வதை தடுக்க வேண்டும். சின்னமனூரில் மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி ஊர்வலம் நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.