| ADDED : மே 08, 2024 04:58 AM
மூணாறு : வாகமண்ணில் கண்ணாடி நடை பாலத்தில் இரவில் அத்துமீறி நுழைந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதியான வாகமண்ணில் கோலாகலமேட்டில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம், தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் அந்தரத்தில் 120 அடி நீளத்தில் கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டது. இது நாட்டின் மிகவும் நீளமான பாலமாகும். இந்த பாலம் செப்.6ல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் மே 6ல் காலை பாலத்தை தூய்மை படுத்த ஊழியர்கள் சென்றபோது, அங்கு ஆட்கள் நடமாடியதும், மது அருந்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு நடத்திய போது மே 5ல் இரவு 9:00 மணிக்கு காரில் வந்த மூன்று பேர் கேட்டைக் கடந்து கண்ணாடி நடை பாலத்தில் நுழைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தவிர அப்பகுதியில் கழிப்பறையின் கதவு, தண்ணீர் குழாய் ஆகியவற்றை சேதப்படுத்தியதுடன், அதன் அருகில் உள்ள கடையின் முன்புறம் இருந்த குடிநீர் பாட்டில்களையும் சேதப்படுத்தியதாகவும் தெரிய வந்தது.பாலத்தில் அத்துமீறி நுழைந்தது குறித்து மாவட்ட சுற்றுலா துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். வாகமண் போலீசார் விசாரிக்கின்றனர்.