| ADDED : நவ 23, 2025 03:45 AM
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கம்பமெட்டு ரோட்டில் பக்தர்களின் வாகனங்களை திருப்பி விட கோரிக்கை எழுந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்கின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. இருந்த போதும் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் மகர விளக்கு மண்டல பூஜை நாட்களில் லட்சக்கணக்கில் தினமும் பக்தர்கள் செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா , கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் செல்கின்றனர். எந்தாண்டும் இல்லாத வரையில் இந்தாண்டு முதல் நாளே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கூட்ட பராமரிப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விட எஸ்.பி. ஸ்னேகப்ரியா உத்தரவிட வேண்டும் என்று ஏல விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். குமுளி மலைப்பாதையில் ஏற்படும் - போக்குவரத்து நெரிசலை குறைக்க இது சரியான தருணம் என்கின்றனர்.