உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி அ.தி.மு.க., அலுவலகத்தை அ.ம.மு.க., கைப்பற்றியதா

தேனி அ.தி.மு.க., அலுவலகத்தை அ.ம.மு.க., கைப்பற்றியதா

தேனி:தேனி மாவட்ட அ.ம.மு.க., ஆலோனைக் கூட்டங்கள் தேனி -- போடி ரோட்டில் அமைந்துள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருவதால் கட்சி அலுவலகத்தை அ.ம.மு.க.,வினர் கைப்பற்றிவிட்டனரா என அ.தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.தேனி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் தேனி -போடி ரோடு ஆர்.எம்.டி.சி. காலனி அருகே அமைந்துள்ளது. இங்கு தரைத்தளம், முதல் தளம் என 700 பேர் அமரும் வகையில் அலுவலகம் உள்ளது. 2016 ஜன., 13ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் கட்சி அலுவலகங்களை எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை சார்பில் திறந்து வைத்தார். அறக்கட்டளை நிர்வாகத்தில் சசிகலா முக்கியப் பொறுப்பில் இருந்தாலும், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் அதனை நிர்வகித்து வந்தார். ஜெ., மறைவிற்கு பின் அ.தி.மு.க.,வில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது பொதுச் செயலாளராக பழனிச்சாமி உள்ளார். இந்நிலையில் சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன், பழனிச்சாமி என யாருக்கும் தனது ஆதரவை தெரிவிக்காமல் பூங்குன்றன் இருந்தார். இதனால் சசிகலா, அறக்கட்டளை நிர்வாகத்தை தன்வசப்படுத்தினார். கட்சி அலுவலகம் சசிகலாவிடம் வந்த பின் தேனி அ.தி.மு.க., அலுவலகத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க., என இருதரப்பினரும் கூட்டம் நடத்துவோம்' எனக்கூறியதால் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே 'யாரும் செல்லக்கூடாது' என தடை விதித்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். பின் பெரியகுளம் ஆர்.டி.ஓ., தலைமையில் இருதரப்பு விசாரணையில் அ.தி.மு.க., சார்பில் முறையாக எந்த ஆவணங்களும் சமர்பிக்க வில்லை. கடந்த 3 ஆண்டுகளாக கட்சி அலுவலகத்தில் எவ்வித கூட்டமும் நடத்தப்படாமல் இருந்தது. கட்சி அலுவலக பராமரிப்பை பன்னீர்செல்வம் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.ம.மு.க., மாவட்டச் செயலாளர்கள் பராமரித்தனர். அ.ம.மு.க., சார்பில் இதுவரை 7 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி உள்ளனர். நேற்று லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.அ.ம.மு.க., மாவட்டச் செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன் கூறுகையில், இரண்டு ஆண்டுகளாக நாங்கள் பராமரித்து வருகிறோம். அதன் காரணமாகவே கூட்டங்களை நடத்துகிறோம். எங்களிடம் ஆர்.டி.ஓ., உத்தரவும் உள்ளது,' என்றனர். அ.தி.மு.க., தெற்கு மாவட்டச் செயலாளர் ஜக்கையன் கூறுகையில், கூட்டம் நடத்தினார்களா, தகவல் இல்லை. விசாரிக்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை