மாவட்டத்தில் போடி, மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, அணைக்கரைப்பட்டி, ராசிங்காபுரம், பூதிப்புரம், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மக்காச்சோளத்தில் தற்போது பூச்சி தாக்குதல் இல்லாததால் பெரும்பாலன விவசாயிகள் மற்ற பயிர்கள் பயிரிடுவதை காட்டிலும் மக்காச்சோளம் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மக்காச்சோளம் போதிய விளைச்சல் இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 2100 முதல் ரூ.2200 வரை விற்பனையானது. இந்த ஆண்டு மக்காச்சோளம் விளைச்சலுடன் விலையும் அதிகரித்து குவிண்டால் ரூ. 2200 முதல் ரூ.2400 வரை விலை போகிறது.மக்காச்சோளம் பாப்கான் தயாரிக்கவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் 'ஸ்வீட் கான்' போன்றவற்றிற்காக அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் சத்து மாவு தயாரிப்பதற்காகவும், கோழி தீவனங்களுக்காகவும் பல்வேறு நிறுவனங்கள் இப் பகுதிக்கே வந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றன. தற்போது நல்ல விலை கிடைப்பதால் மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விலை உயர்வு
கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் அதிக அளவு கொள்முதல் செய்யாததால் விளைச்சல் இருந்தும் விலை இன்றி குவிண்டால் ரூ.1600 முதல் 1800 வரை விலை இருந்தது. கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்த நிலையில் குவிண்டால் 2100 முதல் 2200 வரை விலை இருந்தது. இந்த ஆண்டு மழையால் விளைச்சல் மட்டுமின்றி விலையும் அதிகரித்துள்ளது. நன்கு விளைந்த கலர் உள்ள மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2300 முதல் ரூ. 2400 வரை விலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 20 குவிண்டால் மகசூல்
பெத்தணன், விவசாயி பத்திரகாளிபுரம் : மக்காச்சோள பயிருக்கு போதிய அளவிற்கு தண்ணீர் வசதி தேவை. நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு குழி நிலத்தில் குறைந்தது 17 முதல் 20 குவிண்டால் மகசூல் கிடைக்கும். போதிய விளைச்சல் இல்லாத நிலையில் மக்காச்சோளம் வளர்ச்சி குறைந்து குழிக்கு 15 குவிண்டாலுக்கும் குறைவாக மகசூல் கிடைக்கும். சமீபத்தில் பெய்த மழையால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. பத்திரகாளிபுரம் பகுதியில் குழிக்கு 17 குவிண்டாலும், மீனாட்சிபுரம் பகுதியில் 20 குவிண்டால் வரை கிடைத்து வருகிறது என்றார்.