| ADDED : ஜன 15, 2024 11:35 PM
உலகம் முழுவதும் இன்று சர்க்கரை நோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நோய் வருமுன் காக்க மத்திய ஆயூஷ் அமைச்சகம் திட்டம் ஒன்றை தயாரித்து கடந்தாண்டு செயல்படுத்தியது. அதன்படி கிராமங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அலோபதி அல்லாத அதாவது சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஒமியோபதி, யோகா, இயற்கை வைத்தியம் ஆகிய துறைகளில் நிபுணத்வம் பெற்ற டாக்டர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.அதன்படி கடந்தாண்டு நவம்பரில் தேனி மாவட்டத்தில் கண்டமனுார், காமயகவுண்டன்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 15 செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.குடும்ப வழியாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு முன் தடுப்பு நடவடிக்கையாக ஆயுஷ் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.இந்த பெட்டகத்தில் சித்த மருந்தான அசைத்தைலம், சீமை அமுக்ரா மாத்திரை, ஆயுர்வேத மருந்தான நிசா அமலகி மாத்திரை, யுனானி மருந்தான பெப்டிகேர், ஓமியோபதி மருந்தான் ஆல்பால் பா சிரப் ஆகியவை பெட்டகத்தில் இருந்தன. இந்த பெட்டகங்கள் கிராம செவிலியர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. எனவே 'வருமுன் காக்க, பயிற்சி பெற்ற செவிலியர்கள், சர்க்கரை நோய் வரக்கூடியவர்களை கண்டறியும் பணியை தொய்வின்றி மேற்கொண்டு, அவர்களுக்கு மருந்து பெட்டகங்களை தந்து, சர்க்கரை நோய் பாதிப்பை தடுத்து, பாதிப்பில்லா தேனி மாவட்டத்தை உருவாக்க சுகாதாரத்துறை துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.