| ADDED : ஜன 02, 2024 06:15 AM
தேனி; பத்திரப் பதிவுத்துறை ‛சர்வர்' முடங்கியதால் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்ய முடியாமல் சொத்து வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாநில பதிவுத்துறைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சுப நாட்கள், முக்கிய பண்டிகை நாட்களில் பத்திரப்பதிவு செய்ய துறை அனுமதி அளித்துள்ளது. அன்று விடுமுறை நாட்களாக அறிவித்து இருந்தாலும் பத்திர பதிவு அலுவலங்கள் செயல்பட்டு பதிவுகள் நடைபெறும். இந்த வகையில் நேற்று ஆங்கில புத்தாண்டில் சொத்து பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலங்களுக்கு பலரும் வந்தனர். ஆனால் பதிவுத்துறை இணையத்தளமான https://tnreginet.gov.in/ என்ற போர்ட்டல் 'சர்வர்' பிரச்னையால் முடங்கியது. இதனால் சொத்து வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பொது மக்கள் ஆவணங்களை தயார் செய்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் தாக்கல் செய்ததால், அலுவலர்களின் உள்நுழைவு இணையத்தளமான https://star2.tnreginet.net என்ற இணைய முகவரியும் இயங்கவில்லை. இதனால் பொது மக்களும், பதிவுத்துறை பணியாளர்கள் சிரமப்படுவதுடன், மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஆவணத்தை தாக்கல் செய்த பொது மக்கள் இயல்பு நேரத்தை விட இரவு வரை காத்திருந்து தவித்தனர். ஒரு சிலர் பதிவுத்துறை பணியாளர்களிடம் வாக்குவாதம், தகராறில் ஈடுபடுவது தொடர்ந்தது. ஆவண எழுத்தர்கள் கூறுகையில், ‛பொதுவாக பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் அதிகளவில் டோக்கன் வழங்கப்பட்டு, ஆவணப்பதிவு நடக்கும். ‛சர்வர்' பழுது காரணமாக பதிவு நடக்கவில்லை. கடந்த வாரம் இதே நிலை நீடித்தது. தற்போது நீடிக்கிறது. இதற்கு மாநில பதிவுத்துறை தலைவர், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என்றார். பத்திரப்பதிவு துறை சர்வர் அடிக்கடி இதுபோன்று பழுதாகி வருவதால் தமிழ்நாடு சார்பதிவாளர்கள் சங்கம் சார்பில் இப் பிரச்னைக்கு தீர்வு காண கடந்த டிச.20 ல் பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியும் பிரச்னை தீராமல் தொடர்கிறது. இதனால் பத்திர பதிவு செய்ய வருவோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.